ஸெளந்தர்யலஹரி 71-74
71) அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-71
_____________________________
நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம் !!
தாயே உமா!, புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான, அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?. மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம் ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம்.
அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை, அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர். புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல. அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை, ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இருப்பதாக வேண்டுமானால் கூறலாம் என்கிறார்.
லலிதா ஸஹஸ்ரநாமம், இதை
நகதீதி ஸஞ்சந்ந நமஜ்ஜந தமோகுணா --
அதாவது
அம்பாளின் கை விரல் நகங்கள் செய்யும் சேவையை என்னவென்று சொல்வது. நமது மனதின் இருளை (தமோ குணத்தை) போக்கும் ஒளி வீசுபவை . அப்படி பளபளவென்று கண்ணாடி மாதிரி ஜொலிக்கும் நகங்கள் என்று கூறுவதை காணலாம்
___________________________________________
அழகின் ஆனந்த அலைகள்
#ஸெளந்தர்யலஹரி-72
_____________________
ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம்
யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி!!
தாயே!, உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும், அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள் எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும். அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார்.
தேவதேவர்களுக்கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும். அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்குஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார்.
____________________________________________
அழகின் ஆனந்த அலைகள்
ஸெளந்தர்யலஹரி-73
____________________________
நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள்
அமூ தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன க்ரௌஞ்சதலனௌ 73
அம்மா !!, உன்னுடைய மார்பிலிருப்பது பால் நிறைந்த ஸ்தனங்களல்ல, அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும்பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள். அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர். இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம்.
மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால் அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர். இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர். அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும்.
__________________________________________
#ஸெளந்தர்யலஹரி-74
_____________________________
மார்பில் விளங்கும் முத்துமாலை
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: ஶபலிதாம்
ப்ரதாப வ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே 74
அம்மா ! உன்னுடைய நகில்களின் மத்தியப்பிரதேசம் கஜாசுரனுடைய கும்பத்தில் இருந்து உண்டான சிறந்த முத்துக்களால் ஆக்கப்பட்டதும், குற்றமற்றதும் கோவைப்பழம்போல் சிவந்த உதட்டின் காந்தியால் உள்புறம் விசித்திரமான வர்ணங்களோடு பிரகாசிப்பதாகவும், முப்புரம் அழித்த பரமசிவனுடைய பிரதாபத்தோடு கலந்த கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாகவும் உள்ள கொடிபோன்ற ஹாரத்தை தாங்குகிறது.
நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.
சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர் என்று சொல்கிறார் தேதியூரார்
Comments
Post a Comment